துயிலெழுப்பிய காதை


மணிமேகலை தனை மணிபல்லவத்திடை 
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி 
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட 
உதயகுமரன் உறு துயர் எய்தி 
'கங்குல் கழியின் என் கை அகத்தாள்' என 
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் 
முன்னர்த் தோன்றி 'மன்னவன் மகனே! 
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் 
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும் 
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் 
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் 
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த 
அவத் திறம் ஒழிக' என்று அவன்வயின் உரைத்த பின் 
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும் 
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி 
'இந்திர கோடணை இந் நகர்க் காண 
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான் 
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் 
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர் 
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன் 
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு 
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே 
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் 
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர் 
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள் 
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள் 
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள 
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும் 
உரையாய் நீ அவள் என் திறம் உணரும் 
"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என 
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என் 
நாமம் செய்த நல் நாள் நள் இருள் 
"காமன் கையறக் கடு நவை அறுக்கும் 
மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே 
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன் 
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை' என்று 
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு 
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு 
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி 
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின் 
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று 
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை 
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு 
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த 
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும் 
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று 
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர் 
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும் 
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி 
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி 
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி 
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக் 
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து 
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும் 
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்

கா உறை பறவையும் நா உள் அழுந்தி 
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று 
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள் 
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின் 
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும் 
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து 
நிறை அழி யானை நெடுங் கூ விளியும் 
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் 
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும் 
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து 
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும் 
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை 
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து 
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் 
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும் 
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் 
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து 
'கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க' என 
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் 
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர் 
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் 
'மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க' என 
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும் 
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப 
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து 
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில் 
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி 
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண் 
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில் 
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும் 
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய 
அந்தில் எழுதிய அற்புதப் பாவை 
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ 
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் 
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே! 
துரகத் தானைத் துச்சயன் தேவி! 
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்! 
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே! 
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து 
தாரை தவ்வை தன்னொடு கூடிய 
வீரை ஆகிய சுதமதி கேளாய்! 
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து 
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு 
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும் 
அஞ்சல்' என்று உரைத்தது அவ் உரை கேட்டு 
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்

காவலாளர் கண் துயில்கொள்ளத் 
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப 
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப் 
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் 
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப 
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப 
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப் 
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப் 
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப் 
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக் 
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக் 
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக் 
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ 
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக் 
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும் 
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த 
மா நகர் வீதி மருங்கில் போகி 
போய கங்குலில் புகுந்ததை எல்லாம் 
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்

நல் மணி இழந்த நாகம் போன்று அவள் 
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப 
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் 
துன்னியது உரைத்த சுதமதி தான் என்

0 comments:

Post a Comment