• அம்மா

    அழகு தமிழின் தனித்துவம்...

  • விவேகானந்தர்

    வேகமாக ஓடி என்ன பயன்.

  • 26 விஸ் 247

    247 எழுத்து படிச்ச நமக்கு எவ்வளவு இருக்கும்?

Showing posts with label மணிமேகலை. Show all posts
Showing posts with label மணிமேகலை. Show all posts

பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை


தானம் தாங்கிச் சீலம் தலைநின்று 
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் 
புத்த தன்ம சங்கம் என்னும் 
முத் திற மணியை மும்மையின் வணங்கி 
சரணாகதியாய்ச் 'சரண்' சென்று அடைந்தபின் 
முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன் 
'அறிவு வறிதாய் உயிர் நிறை காலத்து 
முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப 
துடிதலோகம் ஒழியத் தோன்றி 
போதி மூலம் பொருந்தியிருந்து

மாரனை வென்று வீரன் ஆகி 
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும் 
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை 
இறந்த காலத்து எண் இல் புத்தர்களும் 
சிறந்து அருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது 
ஈர் அறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய்ச் 
சார்பின் தோன்றி தத்தமில் மீட்டும் 
இலக்கு அணத் தொடர்தலின் 
மண்டில வகையாய் அறியக் காட்டி 
எதிர் முறை ஒப்ப மீட்சியும் ஆகி

ஈங்கு இது இல்லாவழி இல்லாகி 
ஈங்கு இது உள்ளவழி உண்டு ஆகலின் 
தக்க தக்க சார்பின் தோற்றம் எனச் 
சொற்றகப்பட்டும் இலக்கு அணத் தொடர்பால் 
கருதப்பட்டும் கண்டம் நான்கு உடைத்தாய் 
மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய் 
தோற்றம் பார்க்கின் மூன்று வகை ஆய் 
தோற்றற்கு ஏற்ற காலம் மூன்று உடைத்தாய் 
குற்றமும் வினையும் பயனும் விளைந்து 
நிலையில வறிய துன்பம் என நோக்க

உலையா வீட்டிற்கு உறுதி ஆகி 
நால்வகை வாய்மைக்குச் சார்பு இடன் ஆகி 
ஐந்து வகைக் கந்தத்து அமைதி ஆகி 
மெய் வகை ஆறு வழக்கு முகம் எய்தி 
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி 
இயன்ற நால்வகையால் வினா விடை உடைத்தாய் 
நின்மதி இன்றி ஊழ்பாடு இன்றிப் 
பின்போக்கு அல்லது பொன்றக் கெடாதாய் 
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய் 
யானும் இன்றி என்னதும் இன்றி

போனதும் இன்றி வந்ததும் இன்றி 
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி 
வினையும் பயனும் பிறப்பும் வீடும் 
இனையன எல்லாம் தானே ஆகிய 
பேதைமை செய்கை உணர்வே அருஉரு 
வாயில் ஊறே நுகர்வே வேட்கை 
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் 
இற்று என வகுத்த இயல்பு ஈர் ஆறும் 
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் 
அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர்

"பேதைமை என்பது யாது?" என வினவின் 
ஓதிய இவற்றை உணராது மயங்கி 
இயற்படு பொருளால் கண்டது மறந்து 
முயற்கோடு உண்டு எனக் கேட்டது தௌிதல் 
உலகம் மூன்றினும் உயிர் ஆம் உலகம் 
அலகு இல பல் உயிர் அறு வகைத்து ஆகும் 
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் 
தொக்க விலங்கும் பேயும் என்றே 
நல்வினை தீவினை என்று இரு வகையால் 
சொல்லப்பட்ட கருவில் சார்தலும்

கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி 
வினைப்பயன் விளையுங்காலை உயிர்கட்கு 
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும் 
"தீவினை என்பது யாது?" என வினவின் 
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய் 
கொலையே களவே காமத் தீவிழைவு 
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் 
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல் 
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் 
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று 

உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும் எனப் 
பத்து வகையால் பயன் தெரி புலவர் 
இத் திறம் படரார் படர்குவர் ஆயின் 
விலங்கும் பேயும் நரகரும் ஆகி 
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர் 
"நல்வினை என்பது யாது?" என வினவின் 
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் 
சீலம் தாங்கித் தானம் தலைநின்று 
மேல் என வகுத்த ஒருமூன்று திறத்துத் 
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி

மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் 
உணர்வு எனப்படுவது உறங்குவோர் உணர்வின் 
புரிவு இன்றாகிப் புலன் கொளாததுவே 
அருஉரு என்பது அவ் உணர்வு சார்ந்த 
உயிரும் உடம்பும் ஆகும் என்ப 
வாயில் ஆறும் ஆயுங்காலை 
உள்ளம் உறுவிக்க உறும் இடன் ஆகும் 
ஊறு என உரைப்பது உள்ளமும் வாயிலும் 
வேறு புலன்களை மேவுதல் என்ப 
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்

வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை 
பற்று எனப்படுவது பசைஇய அறிவே 
பவம் எனப்படுவது கரும ஈட்டம் 
தரும் முறை இது எனத் தாம்தாம் சார்தல் 
பிறப்பு எனப்படுவது அக் கருமப் பெற்றியின் 
உறப் புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் 
காரண காரிய உருக்களில் தோன்றல் 
பிணி எனப்படுவது சார்பின் பிறிது ஆய் 
இயற்கையின் திரிந்து உடம்பு இடும்பை புரிதல் 
மூப்பு என மொழிவது அந்தத்து அளவும்

தாக்கும் நிலையாமையின் தாம் தளர்ந்திடுதல் 
சாக்காடு என்பது அருஉருத் தன்மை 
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல் 
பேதைமை சார்வா செய்கை ஆகும் 
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும் 
உணர்ச்சி சார்வா அரூரு ஆகும் 
அருஉருச் சார்வா வாயில் ஆகும் 
வாயில் சார்வா ஊறு ஆகும்மே 
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் 
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்

வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே 
பற்றின் தோன்றும் கருமத் தொகுதி 
கருமத் தொகுதி காரணமாக 
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம் 
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு 
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத் 
தவல் இல் துன்பம் தலைவரும் என்ப 
ஊழின் மண்டிலமாச் சூழும் இந் நுகர்ச்சி 
பேதைமை மீள செய்கை மீளும் 
செய்கை மீள உணர்ச்சி மீளும்

உணர்ச்சி மீள அருஉரு மீளும் 
அருஉரு மீள வாயில் மீளும் 
வாயில் மீள ஊறு மீளும் 
ஊறு மீள நுகர்ச்சி மீளும் 
நுகர்ச்சி மீள வேட்கை மீளும் 
வேட்கை மீள பற்று மீளும் 
பற்று மீள கருமத் தொகுதி 
மீளும் கருமத் தொகுதி மீளத் 
தோற்றம் மீளும் தோற்றம் மீளப் 
பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச்

சாக்காடு அவலம் அரற்றுக் கவலை 
கையாறு என்று இக் கடை இல் துன்பம் 
எல்லாம் மீளும் இவ் வகையால் மீட்சி 
ஆதிக் கண்டம் ஆகும் என்ப 
பேதைமை செய்கை என்று இவை இரண்டும் 
காரண வகைய ஆதலானே 
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப 
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே 
நுகர்ச்சி என்று நோக்கப்படுவன 
முன்னவற்று இயல்பான் துன்னிய ஆதலின்

மூன்றாம் கண்டம் வேட்கை பற்று 
கரும ஈட்டம் எனக் கட்டுரைப்பவை 
மற்று அப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள் 
குற்றமும் வினையும் ஆகலானே 
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே 
மூப்பே சாவு என மொழிந்திடும் துன்பம் 
என இவை பிறப்பில் உழக்கு பயன் ஆதலின் 
பிறப்பின் முதல் உணர்வு ஆதிச் சந்தி 
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் 
புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி 

கன்மக் கூட்டத்தொடு வரு பிறப்பிடை 
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி 
மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை 
ஆன்ற பிற மார்க்கத்து ஆய உணர்வே 
தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் 
உணர்வு உள் அடங்க உருவாய்த் தோன்றியும் 
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப் 
புணர்தரு மக்கள் தெய்வம் விலங்கு ஆகையும் 
காலம் மூன்றும் கருதுங்காலை 
இறந்த காலம் என்னல் வேண்டும் 

மறந்த பேதைமை செய்கை ஆனவற்றை 
நிகழ்ந்த காலம் என நேரப்படுமே 
உணர்வே அருஉரு வாயில் ஊறே 
நுகர்வே வேட்கை பற்றே பவமே 
தோற்றம் என்று இவை சொல்லுங்காலை 
எதிர்காலம் என இசைக்கப்படுமே 
பிறப்பே பிணியே மூப்பே சாவே 
அவலம் அரற்று கவலை கையாறுகள் 
குலவிய குற்றம் எனக் கூறப்படுமே 
அவாவே பற்றே பேதைமை என்று இவை

புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் 
உணர்ச்சி அருஉரு வாயில் ஊறே 
நுகர்ச்சி பிறப்பு மூப்புப் பிணி சாவு இவை 
நிகழ்ச்சிப் பயன் ஆங்கே நேருங்காலை 
குற்றமும் வினையும் பயனும் துன்பம் 
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா 
எப்பொருளுக்கும் ஆன்மா இலை என 
இப்படி உணரும் இவை வீட்டு இயல்பு ஆம் 
உணர்வே அருஉரு வாயில் ஊறே 
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே

அவலம் அரற்றுக் கவலை கையாறு என 
நுவலப் படுவன நோய் ஆகும்மே 
அந் நோய் தனக்குப் 
பேதைமை செய்கை அவாவே பற்றுக் 
கரும ஈட்டம் இவை காரணம் ஆகும் 
துன்பம் தோற்றம் பற்றே காரணம் 
இன்பம் வீடே பற்றிலி காரணம் 
ஒன்றிய உரையே வாய்மை நான்கு ஆவது 
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை 
உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன

அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின் 
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை 
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த 
உண்மை வழக்கும் இன்மை வழக்கும் 
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் 
இல்லது சார்ந்த இன்மை வழக்கும் 
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் 
இல்லது சார்ந்த உண்மை வழக்கும் எனச் 
சொல்லிய தொகைத் திறம் உடம்பு நீர் நாடு 
தொடர்ச்சி வித்து முளை தாள் என்று இந்

நிகழ்ச்சியில் அவற்றை நெல் என வழங்குதல் 
இயல்பு மிகுத்துரை ஈறுடைத்து என்றும் 
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும் 
மூன்றின் ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் 
இயைந்துரை என்பது எழுத்துப் பல கூடச் 
சொல் எனத் தோற்றும் பல நாள் கூடிய 
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் 
உள் வழக்கு உணர்வு இல் வழக்கு முயற்கோடு 
உள்ளது சார்ந்த உள் வழக்காகும் 
சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி 

உள்ளது சார்ந்த இல் வழக்காகும் 
சித்தம் உற்பவித்தது மின்போல் என்கை 
இல்லது சார்ந்த உண்மை வழக்காகும் 
காரணம் இன்றிக் காரியம் நேர்தல் 
இல்லது சார்ந்த இல் வழக்கு ஆகும் 
முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல் எனல் 
நான்கு நயம் எனத் தோன்றப்படுவன 
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க 
காரண காரியம் ஆகிய பொருள்களை 
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயம் ஆம்

வீற்று வீற்றாக வேதனை கொள்வது 
வேற்றுமை நயம் என வேண்டல் வேண்டும் 
பொன்றக் கெடா அப் பொருள் வழிப்பொருள்களுக்கு
ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் 
தருதற்கு உள்ளம் தான் இலை என்றல் 
புரிவின்மை நயம் எனப் புகறல் வேண்டும் 
நெல் வித்து அகத்துள் நெல் முளை தோற்றும் எனல் 
நல்ல இயல்பு நயம் இவற்றில் நாம் கொள்பயன் 
தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் 
அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும்

செய்வானொடு கோட்பாடு இலை என்றும் 
எய்து காரணத்து ஆம் காரியம் என்றும் 
அதுவும் அன்று அது அலாததும் அன்று என்றும் 
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் 
வினா விடை நான்கு உள 
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் 
வினாவின் விடுத்தல் வாய் வாளாமை எனத் 
"தோன்றியது கெடுமோ? கெடாதோ?" என்றால் 
"கேடு உண்டு" என்றல் துணிந்து சொலல் ஆகும் 
"செத்தான் பிறப்பானோ? பிறவானோ?"

என்று செப்பின் 
"பற்று இறந்தானோ? அல் மகனோ?" எனல் 
மிகக் கூறிட்டு மொழிதல் என விளம்புவர் 
வினாவின் விடுத்தல் "முட்டை முந்திற்றோ 
பனை முந்திற்றோ? எனக் கட்டுரை செய்" 
என்றால் "எம் முட்டைக்கு எப் பனை" என்றல் 
வாய் வாளாமை "ஆகாயப் பூப் 
பழைதோ, புதிதோ?" என்று புகல்வான் 
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் 
கட்டும் வீடும் அதன் காரணத்தது

ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை 
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம் 
காமம் வெகுளி மயக்கம் காரணம் 
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என 
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல் 
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து 
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக! 
சுருதி சிந்தனா பாவனா தரிசனை 
கருதி உய்த்து மயக்கம் கடிக! 
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!' என்று

முன் பின் மலையா மங்கல மொழியின் 
ஞான தீபம் நன்கனம் காட்டத் 
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப் 
'பவத் திறம் அறுக!' எனப் பாவை நோற்றனள் என்

தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை


இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி 
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன் 
'வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் 
தன் மகள் பீலிவளை தான் பயந்த 
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி 
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும் 
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக் 
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து 
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும் 
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று 
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் 
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் 
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த 
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள் 
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற 
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத் 
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி 
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா 
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட

பான்மையின் தனாது பாண்டு கம்பளம் 
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி 
"ஆதி முதல்வன் போதி மூலத்து 
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின் 
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப் 
பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும் 
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும் 
பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே 
சாரணர் அறிந்தோர் காரணம் கூற 
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும் 
அன்றே கனவில் நனவென அறைந்த 
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம் 
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து 
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும் 
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் 'படர்ந்தனம்' 
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி 
'பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் 
தீவதிலகையும் இத் திறம் செப்பினள் 
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே

வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும் 
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே 
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும் 
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன் 
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக' என்ன 
'நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ 
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே 
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச் 
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி 
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்

மற்று அவை அனுமானத்தும் அடையும் என 
காரண காரிய சாமானியக் கருத்து 
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது 
கனலில் புகைபோல் காரியக் கருத்தே 
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் 
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற 
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் 
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில் 
பக்கம் "இம் மலை நெருப்புடைத்து" என்றல் 
"புகையுடைத்து ஆதலால்" எனல் பொருந்து ஏது

"வகை அமை அடுக்களை போல்" திட்டாந்தம் 
உபநயம் "மலையும் புகையுடைத்து" என்றல் 
நிகமனம் "புகையுடைத்தே நெருப்புடைத்து" என்றல் 
"நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப் 
பொருத்தம் இன்று புனல்போல்" என்றல் 
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய் 
வைதன்மிய திட்டாந்தம் ஆகும் 
தூய காரிய ஏதுச் சுபாவம் 
ஆயின் "சத்தம் அநித்தம்" என்றல் 
பக்கம் "பண்ணப்படுதலால்" எனல்

பக்க தன்ம வசனம் ஆகும் 
"யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது 
அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத் 
தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது 
பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல் 
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க 
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது 
"இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல் 
செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல் 
பக்க தன்ம வசனம் ஆகும்

"இன்மையின் கண்டிலம் முயற்கோடு" என்றல் 
அந் நெறிச் சபக்கம் "யாதொன்று உண்டு அது 
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்" எனல் 
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும் 
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன 
"என்னை காரியம் புகை சாதித்தது?" என்னின் 
"புகை உள இடத்து நெருப்பு உண்டு" என்னும் 
அன்னுவயத்தாலும் "நெருப்பு இலா இடத்துப் 
புகை இல்லை" என்னும் வெதிரேகத்தாலும் 
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான 
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம் 
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின் 
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப 
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் 
அன்னுவயம் சாதிக்கின் "முன்னும் 
கழுதையையும் கணிகையையும் 
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே 
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து 
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை

அனுமிக்க வேண்டும் அது கூடா" "நெருப்பு 
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத் 
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்" என்னின் 
"நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில் 
நரி வாலும் இலையா காணப்பட்ட 
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து 
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல் 
அரிதாம்" அதனால் அதுவும் ஆகாது 
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும் 
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்

பக்கம் ஏது திட்டாந்தங்கள் 
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில் 
வௌிப்பட்டுள்ள தன்மியினையும் 
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் 
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும் 
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது 
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான் 
"சத்தம் அநித்தம் நித்தம்" என்று ஒன்றைப் 
பற்றி நாட்டப்படுவது தன்மி 
சத்தம் சாத்திய தன்மம் ஆவது

நித்த அநித்தம் நிகழும் நல் ஏது 
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து 
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் 
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம் 
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து 
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல் 
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின் 
"ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல் 
விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று 
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது

ஆ அகாசம் போல்" என்று ஆகும் 
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் 
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய் 
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு 
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க 
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய 
சாதன்மியம் வைதன்மியம் என 
சாதன்மியம் எனப்படுவது தானே 
"அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை 
வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம்

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை" 
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன 
தீய பக்கமும் தீய ஏதுவும் 
தீய எடுத்துக்காட்டும் ஆவன 
பக்கப் போலியும் ஏதுப் போலியும் 
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள் 
பக்கப்போலி ஒன்பது வகைப்படும் 
பிரத்தியக்க விருத்தம் அனுமான 
விருத்தம் சுவசன விருத்தம் உலோக 
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

சித்த விசேடணம் அப்பிரசித்த 
விசேடியம் அப்பிரசித்த உபயம் 
அப்பிரசித்த சம்பந்தம் என 
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் 
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் 
"சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல் 
மற்று அனுமான விருத்தம் ஆவது 
கருத்து அளவையை மாறாகக் கூறல் 
"அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல் 
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்

"என் தாய் மலடி" என்றே இயம்பல் 
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை 
"இலகு மதி சந்திரன் அல்ல" என்றல் 
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் 
அநித்த வாதியா உள்ள வைசேடிகன் 
"அநித்தியத்தை நித்தியம்" என நுவறல் 
அப்பிரசித்த விசேடணம் ஆவது 
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை 
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் 
குறித்து "சத்தம் விநாசி" என்றால் 

அவன் அவிநாசவாதி ஆதலின் 
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும் 
அப்பிரசித்த விசேடியம் ஆவது 
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி 
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற 
பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்" 
என்றால் அவன் அநான்ம வாதி 
ஆதலின் தன்மி அப்பிரசித்தம் 
அப்பிரசித்த உபயம் ஆவது 
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் 
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து 
"சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் 
ஆன்மா" என்றால் சுகமும் ஆன்மாவும் 
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம் 
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது 
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல் 
மாறு ஆம் பௌத்தற்கு "சத்த அநித்தம்" 
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில் 
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்

ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும் 
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என 
உபய அசித்தம் அன்னியதர அசித்தம் 
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம் 
என நான்கு அசித்தம் உபய அசித்தம் 
சாதன ஏது இருவர்க்கும் இன்றி 
"சத்தம் அநித்தம் கண் புலத்து" என்றல் 
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு 
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் 
"சத்தம் செயலுறல் அநித்தம்" என்னின்

சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல் 
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் 
சித்த அசித்தம் ஆவது 
ஏது சங்கயமாய்ச் சாதித்தல் 
ஆவி பனி என ஐயுறா நின்றே 
"தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல் 
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு 
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல் 
"ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின் 
"ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத் 

தன்மி அசித்தம் அநைகாந்திகமும் 
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக 
தேசவிருத்தி விபக்க வியாபி 
விபக்கைகதேச விருத்தி சபக்க 
வியாபி உபயைகதேச விருத்தி 
விருத்த வியபிசாரி என்று ஆறு 
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும் 
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம் 
அநித்தம் அறியப்படுதலின்" என்றால் 
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ? 
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?" 
என்னல் அசாதாரணம் ஆவது தான் 
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச் 
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் 
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்" 
என்னின் "கேட்கப்படல்" எனும் ஏதுப் 
பக்கத்து உள்ளதாயின் அல்லது 
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின் 
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்

சபக்கைகதேச விருத்தி விபக்க 
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து 
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும் 
உண்டாதல் ஆகும் "சத்தம் செயலிடைத் 
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்" 
என்றால் "அநித்தம்" என்ற ஏதுச் 
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் 
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின் 
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின் 
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் "கடம் போல்

அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல் 
அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல் 
விபக்கைகதேச விருத்தி சபக்க 
வியாபி ஆவது ஏது விபக்கத்து 
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல் 
"சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின்" எனின் 
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு 
விபக்க ஆகாயத்தினும் மின்னினும் 
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது 
சபக்கக் கட ஆதிகள் தம்மில்

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல "மின் போல் 
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல் 
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல் 
உபயைகதேச விருத்தி ஏதுச் 
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி 
ஓர் தேசத்து வர்த்தித்தல் "சத்தம் 
நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்னின் 
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச் 
சபக்க ஆகாச பரமாணுக்களின் 
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்

பரமாணுவின் நிகழாமையானும் 
விபக்கமான கட சுக ஆதிகளில் 
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் 
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று 
"அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ? 
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல் 
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய் 
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல் 
"சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் 
ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்

சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க 
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் 
சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல் 
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல 
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின் 
தன்மச் சொரூப விபரீத சாதனம் 
தன்ம விசேட விபரீத சாதனம் 
தன்மிச் சொரூப விபரீத சாதனம் 
தன்மி விசேட விபரீத சாதனம் 
என்ன நான்கு வகையது ஆகும் அத் 

தன்மச் சொரூப விபரீத சாதனம் 
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து 
உருவம் கெடுதல் "சத்தம் நித்தம் 
பண்ணப்படுதலின்" என்றால் பண்ணப் 
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட 
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு 
அநித்தம் சாதித்தலான் விபரீதம் 
தன்ம விசேட விபரீத சாதனம் 
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம் 
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்

"கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் 
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால் 
சயன ஆசனங்கள் போல" என்றால் 
"தொக்கு நிற்றலின்" என்கின்ற ஏதுச் 
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல் 
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச் 
சயன ஆசனவானைப் போல் ஆகிக் 
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச் 
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள 
ஆன்மாவைச் சாவயவமாகச்

சாதித்துச் சாத்திய தன்மத்தின் 
விசேடம் கெடுத்தலின் விபரீதம் 
தன்மிச் சொரூப விபரீத சாதனம் 
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை 
ஏதுத் தானே விபரீதப்படுத்தல் 
"பாவம் திரவியம் கன்மம் அன்று 
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக் 
குண கன்மத்து உண்மையின் வேறாதலால் 
சாமானிய விசேடம்போல்" என்றால் 
"பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று 
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை 
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம் 
உண்மை சாத்தியத்து இல்லாமையினும் 
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம் 
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் 
பாவம் என்று பகர்ந்த தன்மியினை 
அபாவம் ஆக்குதலான் விபரீதம் 
தன்மி விசேட விபரீத சாதனம் 
தன்மி விசேட அபாவம் சாதித்தல் 

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே 
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய 
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் 
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம் 
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன 
தாமே திட்டாந்த ஆபாசங்கள் 
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன் 
கூறப்பட்டன இங்கண் அவற்றுள் 
சாதன்மிய திட்டாந்த ஆபாசம் 
ஓதில் ஐந்து வகை உளதாகும்

சாதன தன்ம விகலமும் சாத்திய 
தன்ம விகலமும் உபய தன்ம 
விகலமும் அநன்னுவயம் விபரீதான் 
னுவயம் என்ன வைதன்மிய திட் 
டாந்த ஆபாசமும் ஐ வகைய 
சாத்தியா வியாவிருத்தி 
சாதனா வியாவிருத்தி 
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம் 
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் 
சாதன தன்ம விகலம் ஆவது

திட்டாந்தத்தில் சாதனம் குறைவது 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
ஆதலான் காண்புற்றது பரமாணுவில்" எனின் 
திட்டாந்தப் பரமாணு 
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான் 
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச் 
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும் 
சாத்திய தன்ம விகலம் ஆவது 
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்

சாத்திய தன்மம் குறைவுபடுதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
புத்திபோல்" என்றால் 
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே 
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம் 
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும் 
உபய தன்ம விகலம் ஆவது 
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் 
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும் 
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள 
உபய தன்ம விகலம் ஆவது 
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் 
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் 
கடம் போல்" எனின் திட்டாந்தமாகக் 
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்

சாத்தியமாய் உள நித்தத்துவமும் 
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும் 
அசன்னா உள்ள உபய தன்ம விகலம் 
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம் 
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல் 
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான் 
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் 
ஆகாசம் போல்" எனும் திட்டாந்தத்து 
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும் 
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்

இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு 
அதன்கண் இன்மையானே குறையும் 
"உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம் 
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும் 
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம் 
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே 
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் 
"சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின் 
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும் 
அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே

கிருத்த அநித்தம் காணப்பட்ட" 
என்றால் அன்னுவயம் தெரியாதாகும் 
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய 
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல் 
"சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின் 
"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என 
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது 
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என 
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல் 
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் 
வைதன்மிய திட்டாந்தத்துச் 
சாத்தியா வியாவிருத்தி ஆவது 
சாதன தன்மம் மீண்டு 
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது 
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின் 
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்

சாதன அமூர்த்தம் மீண்டு 
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல் 
சாதனா வியாவிருத்தி ஆவது 
சாத்திய தன்மம் மீண்டு 
சாதன தன்மம் மீளாது ஒழிதல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது 
அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால் 
வைதன்மிய திட்டாந்தமாகக் 
காட்டப்பட்ட கன்மம்

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் 
சாத்தியமான நித்தியம் மீண்டு 
சாதனமான அமூர்த்தம் மீளாது 
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட 
வைதன்மிய திட்டாந்தத்தினின்று 
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் 
உண்மையின் உபயா வியாவிருத்தி 
இன்மையின் உபயா வியாவிருத்தி 
என இருவகை உண்மையின் 
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்

சாத்திய சாதனம் மீளாதபடி 
வைதன்மிய திட்டாந்தம் காட்டல் 
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்" 
என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று 
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால் 
"வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட 
ஆகாசம் பொருள்" என்பாற்கு 
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான் 
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள 
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்

உபயா வியாவிருத்தி ஆவது 
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்" 
என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம் 
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என 
வைதன்மிய திட்டாந்தம் காட்டில் 
"ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு 
ஆகாசம் தானே உண்மை இன்மையினால் 
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் 
மீட்சியும் மீளாமையும் இலையாகும் 
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்

இல்லா இடத்துச் சாதனம் இன்மை 
சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம் 
நித்தம் பண்ணப்படாமையால்" என்றால் 
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று 
பண்ணப்படுவது அல்லாது அதுவும் 
அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச் 
சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப் 
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்" 
என்னின் வெதிரேகம் தெரியாது 
விபரீத வெதிரேகம் ஆவது

பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல் 
"சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்" 
என்றால் என்று நின்ற இடத்து 
"யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ் 
இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே 
"யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ் 
இடத்து நித்தமும் இல்லை" என்றால் 
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க 
நாட்டிய இப்படி தீய சாதனத்தால் 
காட்டும் அனுமான ஆபாசத்தின் 
மெய்யும் பொய்யும் இத்திற விதியால் 
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்

கச்சி மாநகர் புக்க காதை


ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து 
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் 
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் 
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து 
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர் 
கருங் குழல் கழீஇய கலவை நீரும் 
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் 
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும் 
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள் 
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்

மேலை மாதவர் பாதம் விளக்கும் 
சீல உபாசகர் செங் கை நறு நீரும் 
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து 
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் 
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் 
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் 
என்று இந் நீரே எங்கும் பாய்தலின் 
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் 
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி 
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்

பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப 
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து 
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய 
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில் 
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த 
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன 
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும் 
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு 
கடை காப்பு அமைந்த காவலாளர் 
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்

பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர் 
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் 
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர் 
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும் 
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும் 
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும் 
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும் 
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும் 
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும் 
மாலைக்காரரும் காலக் கணிதரும்

நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப 
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் 
பாணர் என்று இவர் பல் வகை மறுகும் 
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு 
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும் 
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின் 
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் 
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட 
கூலம் குவைஇய கூல மறுகும் 
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்

போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும் 
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை 
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும் 
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும் 
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும் 
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும் 
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும் 
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும் 
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் 
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்

கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும் 
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும் 
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும் 
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து 
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும் 
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும் 
கோலம் குயின்ற கொள்கை இடங்களும் 
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு 
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும் 
இந்திர விகாரம் என எழில் பெற்று 

நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர் 
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள் 
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன் 
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும் 
தானப் பயத்தால் சாவக மன்னவன் 
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும் 
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை 
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும் 
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி 
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள

அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு 
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும் 
சாவக மன்னன் தன் நாடு எய்த 
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும் 
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே 
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும் 
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் 
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும் 
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி 
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்

சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என் 
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத் 
'தையல்' கேள் நின் தாதையும் தாயும் 
செய்த தீவினையின் செழு நகர் கேடுற 
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் 
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின் 
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து 
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும் 
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே 
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்

புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம் 
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய் 
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை 
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள் 
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும் 
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள் 
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் 
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும் 
தரும சாரணர் தங்கிய குணத்தோர் 
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்

அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின் 
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து 
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி 
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப் 
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின் 
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம் 
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு 
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின் 
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும் 
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை

இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல் 
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள் 
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை 
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு 
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் 
தாங்க நல் அறம் தானும் கேட்டு 
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி 
தன்னான் இயன்ற தனம் பல கோடி 
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து 
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய

வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் 
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது 
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத் 
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் 
"காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத் 
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது 
இன்னும் கேளாய் நல் நெறி மாதே! 
"தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும் 
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால் 
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்

பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம் 
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக் 
காதலி தன்னொடு கபிலை அம் பதியில் 
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று 
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் 
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் 
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் 
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய 
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ? 
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்

ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது 
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின் 
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள் 
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் 
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய் 
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து 
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின் 
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் 
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் 
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்

கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என 
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித் 
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக் 
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி 
வட திசை மருங்கின் வானத்து இயங்கித் 
தேவர் கோமான் காவல் மாநகர் 
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய 
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது 
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை 
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு

நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து 
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி 
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப் 
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய 
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக 
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும் 
வையம் காவலன் தன் பால் சென்று 
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன் 
'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் 
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்

அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு 
தங்காது இப் பதித் தருமதவனத்தே 
வந்து தோன்றினள் மா மழை போல்' என 
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி 
'கந்திற்பாவை கட்டுரை எல்லாம் 
வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி 
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 
'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ 
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ 
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்

அலத்தல்காலை ஆகியது அறியேன் 
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி 
"உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் 
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின் 
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும் 
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின் 
தாங்கா மாரியும் தான் நனி பொழியும் 
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த 
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால் 
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது

பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த 
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு 
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என 
பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத் 
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது 
இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் 
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் 
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள் 
'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய 
அங்கு அப் பீடிகை இது என' அறவோன் 

பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து 
தீவதிலகையும் திரு மணிமேகலா 
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு 
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து 
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற 
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் 
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும் 
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை 
வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என 
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்

மொய்த்த மூ அறு பாடை மாக்களில் 
காணார் கேளார் கால் முடம் ஆனோர் 
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் 
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர் 
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும் 
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் 
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி 
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய் 
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும் 
நீரும் நிலமும் காலமும் கருவியும்

சீர் பெற வித்திய வித்தின் விளைவும் 
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப 
வசித் தொழில் உதவி வளம் தந்தது என 
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச் 
செல்லும்காலை தாயர் தம்முடன் 
அல்லவை கடிந்த அறவண அடிகளும் 
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி 
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும் 
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி 
'நன்று' என விரும்பி நல் அடி கழுவி 

ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப் 
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின் 
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து 
'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என 
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்

சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை


'நவை அறு நன் பொருள் உரைமினோ' என 
சமயக் கணக்கர் தம் திறம் சார்ந்து 
வைதிக மார்க்கத்து அளவை வாதியை 
எய்தினள் எய்தி 'நின் கடைப்பிடி இயம்பு' என 
'வேத வியாதனும் கிருதகோடியும் 
ஏதம் இல் சைமினி எனும் இவ் ஆசிரியர் 
பத்தும் எட்டும் ஆறும் பண்புறத் 
தம் தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர் 
காண்டல் கருதல் உவமம் ஆகமம் 
ஆண்டைய அருத்தாபத்தியோடு இயல்பு

ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு 
எய்தி உண்டாம் நெறி என்று இவை தம்மால் 
பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் 
மருள் இல் காட்சி ஐ வகை ஆகும் 
கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும் 
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால் 
சுவையும் மெய்யால் ஊறும் எனச் சொன்ன 
இவை இவை கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று 
துக்கமும் சுகமும் எனத் துயக்கு அற அறிந்து 
உயிரும் வாயிலும் மனமும் ஊறு இன்றி

பயில் ஒளியொடு பொருள் இடம் பழுது இன்றி 
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது 
கிட்டிய தேசம் நாமம் சாதி 
குணம் கிரியையின் அறிவது ஆகும் 
கருத்து அளவு ஆவது 
குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் 
தகைமை உணரும் தன்மையது ஆகும் 
மூ வகை உற்று அது பொது எச்சம் முதல் ஆம் 
பொது எனப்படுவது சாதன சாத்தியம் 
இவை அந்நுவயம் இன்றாய் இருந்தும்

கடம் திகழ் யானைக் கான ஒலி கேட்டோன் 
உடங்கு "எழில் யானை அங்கு உண்டு" என உணர்தல்
எச்சம் என்பது வெள்ள ஏதுவினால் 
நிச்சயித்து அத் தலை மழை நிகழ்வு உரைத்தல் 
முதல் என மொழிவது கருக்கொள் முகில் கண்டு 
"இது மழை பெய்யும் என இயம்பிடுதல் 
என்னும் ஏதுவின் ஒன்று முக் காலம் 
தன்னில் ஒன்றில் சார்ந்து உளதாகி 
மண்ட உயிர் முதல் மாசு இன்றாகி 
காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்

உவமம் ஆவது ஒப்புமை அளவை 
"கவய மா ஆப் போலும்" எனக் கருதல் 
ஆகம அளவை அறிவன் நூலால் 
"போக புவனம் உண்டு" எனப் புலங்கொளல் 
அருத்தாபத்தி "ஆய்க்குடி கங்கை 
இருக்கும்" என்றால் கரையில் என்று எண்ணல் 
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிற்கு 
அயல் ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல் 
ஐதிகம் என்பது உலகு மறை "இம் மரத்து 
எய்தியது ஓர் பேய் உண்டு" எனத் தௌிதல்

அபாவம் என்பது இன்மை "ஓர் பொருளைத் 
தவாது அவ் இடத்துத் தான் இலை" என்றல் 
மீட்சி என்பது "இராமன் வென்றான்" என 
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல் 
உள்ள நெறி என்பது "நாராசத் திரிவில் 
கொள்ளத் தகுவது காந்தம்" எனக் கூறல் 
எட்டு உள பிரமாண ஆபாசங்கள் 
சுட்டுணர்வொடு திரியக் கோடல் ஐயம் 
தேராது தௌிதல் கண்டு உணராமை 
எய்தும் இல் வழக்கு உணர்ந்ததை உணர்தல்

நினைப்பு என நிகழ்வ சுட்டுணர்வு எனப்படுவது 
எனைப் பொருள் உண்மை மாத்திரை காண்டல் 
திரியக் கோடல் ஒன்றை ஒன்று என்றல் 
விரி கதிர் இப்பியை வெள்ளி என்று உணர்தல் 
ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா 
மையல் தறியோ? மகனோ? என்றல் 
தேராது தௌிதல் செண்டு வௌியில் 
ஓராது தறியை மகன் என உணர்தல் 
கண்டு உணராமை கடு மாப் புலி ஒன்று 
அண்டலை முதலிய கண்டும் அறியாமை

இல் வழக்கு என்பது முயற்கோடு ஒப்பன 
சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல் 
உணர்ந்ததை உணர்தல் உறு பனிக்குத் தீப் 
புணர்ந்திடல் மருந்து எனப் புலம் கொள நினைத்தல் 
நினைப்பு எனப்படுவது காரணம் நிகழாது 
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று 
பிறர் சொலக் கருதல் இப் பெற்றிய அளவைகள் 
பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் 
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் 
மீமாஞ்சகம் ஆம் சமய ஆசிரியர்

தாம் பிருகற்பதி சினனே கபிலன் 
அக்கபாதன் கணாதன் சைமினி 
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் 
உவமானம் அருத்தாபத்தி அபாவம் 
இவையே இப்போது இயன்று உள அளவைகள்' 
என்றவன் தன்னை விட்டு 'இறைவன் ஈசன்' என 
நின்ற சைவ வாதி நேர்படுதலும் 
'பரசும் நின் தெய்வம் எப்படித்து?' என்ன 
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று 
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்

கட்டி நிற்போனும் கலை உருவினோனும் 
படைத்து விளையாடும் பண்பினோனும் 
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் 
தன்னில் வேறு தான் ஒன்று இலோனும் 
அன்னோன் இறைவன் ஆகும்' என்று உரைத்தனன் 
'பேர் உலகு எல்லாம்' பிரம வாதி 'ஓர் 
தேவன் இட்ட முட்டை' என்றனன் 
காதல் கொண்டு கடல்வணன் புராணம் 
ஓதினன் 'நாரணன் காப்பு' என்று உரைத்தனன் 
'கற்பம் கை சந்தம் கால் எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு 
உற்ற வியாகரணம் முகம் பெற்றுச் 
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு 
ஆதி அந்தம் இல்லை அது நெறி' எனும் 
வேதியன் உரையின் விதியும் கேட்டு 
'மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற 
எத் திறத்தினும் இசையாது இவர் உரை' என 
ஆசீவக நூல் அறிந்த புராணனை 
'பேசும் நின் இறை யார்? நூற்பொருள் யாது?' என 
'எல்லை இல் பொருள்களில் எங்கும் எப்பொழுதும்

புல்லிக் கிடந்து புலப்படுகின்ற 
வரம்பு இல் அறிவன் இறை நூற்பொருள்கள் ஐந்து 
உரம் தரும் உயிரோடு ஒரு நால் வகை அணு 
அவ் அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப் 
பெய் வகை கூடிப் பிரிவதும் செய்யும் 
நிலம் நீர் தீ காற்று என நால் வகையின 
மலை மரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் 
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும் 
அவ் வகை அறிவது உயிர் எனப் படுமே 
வற்பம் ஆகி உறும் நிலம் தாழ்ந்து

சொற்படு சீதத்தொடு சுவை உடைத்தாய் 
இழினென நிலம் சேர்ந்து ஆழ்வது நீர் தீத் 
தெறுதலும் மேல் சேர் இயல்பும் உடைத்து ஆம் 
காற்று விலங்கி அசைத்தல் கடன் இவை 
வேற்று இயல்பு எய்தும் விபரீதத்தால் 
ஆதி இல்லாப் பரமாணுக்கள் 
தீதுற்று யாவதும் சிதைவது செய்யா 
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா 
முது நீர் அணு நில அணுவாய்த் திரியா 
ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா 

அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா 
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும் 
குலாம் மலை பிறவாக் கூடும் பலவும் 
பின்னையும் பிரிந்து தம் தன்மைய ஆகும் 
மன்னிய வயிரமாய்ச் செறிந்து வற்பமும் ஆம் 
வேய் ஆய்த் துளைபடும் பொருளா முளைக்கும் 
தேயா மதி போல் செழு நில வரைப்பு ஆம் 
நிறைந்த இவ் அணுக்கள் பூதமாய் நிகழின் 
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின் 
ஒன்று முக்கால் அரை கால் ஆய் உறும்

துன்று மிக்கதனால் பெயர் சொலப்படுமே 
இக் குணத்து அடைந்தால் அல்லது நிலன் ஆய்ச் 
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும் 
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும் 
ஆய தொழிலை அடைந்திடமாட்டா 
ஓர் அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர் 
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர் 
மாலைப் போதில் ஒரு மயிர் அறியார் 
சாலத் திரள் மயிர் தோற்றுதல் சாலும் 
கருமம் பிறப்பும் கரு நீலப் பிறப்பும்

பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும் 
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் 
என்று இவ் ஆறு பிறப்பினும் மேவி 
பண்புறு வரிசையின் பாற்பட்டுப் பிறந்தோர் 
கழி வெண் பிறப்பில் கலந்து வீடு அணைகுவர் 
அழியல் வேண்டார் அது உறற்பாலார் 
இது செம்போக்கின் இயல்பு இது தப்பும் 
அது மண்டலம் என்று அறியல் வேண்டும் 
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும் 
உறும் இடத்து எய்தலும் துக்க சுகம் உறுதலும்

பெரிது அவை நீங்கலும் பிறத்தலும் சாதலும் 
கருவில் பட்ட பொழுதே கலக்கும் 
இன்பமும் துன்பமும் இவையும் அணு எனத் தகும் 
முன் உள ஊழே பின்னும் உறுவிப்பது 
மற்கலி நூலின் வகை இது' என்ன 
சொல் தடுமாற்றத் தொடர்ச்சியை விட்டு 
நிகண்ட வாதியை 'நீ உரை நின்னால் 
புகழும் தலைவன் யார்? நூற்பொருள் யாவை, 
அப் பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் 
மெய்ப்பட விளம்பு' என விளம்பல் உறுவோன்

'இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் 
தந்த நூற்பொருள் தன்மாத்திகாயமும் 
அதன்மாத்திகாயமும் கால ஆகாயமும் 
தீது இல் சீவனும் பரமாணுக்களும் 
நல்வினையும் தீவினையும் அவ் வினையால் 
செய்வுறு பந்தமும் வீடும் இத் திறத்த 
ஆன்ற பொருள் தன் தன்மையது ஆயும் 
தோன்று சார்வு ஒன்றின் தன்மையது ஆயும் 
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று 
நுனித்த குணத்து ஓர் கணத்தின் கண்ணே

தோற்றமும் நிலையும் கேடும் என்னும் 
மாற்று அரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம் 
நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் 
நிம்பத்து அப் பொருள் அன்மை அநித்தயம் 
பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் 
இயற்றி அப் பயறு அழிதலும் ஏதுத் 
தருமாத்திகாயம் தான் எங்கும் உளதாய் 
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா 
அப்படித்தாகி அதன் மாத்திகாயமும் 
எப் பொருள்களையும் நிறுத்தல் இயற்றும்

காலம் கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும் 
ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் 
ஆக்கும் ஆகாயம் எல்லாப் பொருட்கும் 
பூக்கும் இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும் 
சீவன் உடம்போடு ஒத்துக் கூடி 
தா இல் சுவை முதலிய புலன்களை நுகரும் 
ஓர் அணு புற்கலம் புற உரு ஆகும் 
சீர்சால் நல்வினை தீவினை அவை செயும் 
வரு வழி இரண்டையும் மாற்றி முன்செய் 
அரு வினைப் பயன் அனுபவித்து அறுத்திடுதல் 

அது வீடு ஆகும்' என்றனன் அவன்பின் 
'இது சாங்கிய மதம்' என்று எடுத்து உரைப்போன் 
'தனை அறிவு அரிதாய் தான் முக் குணமாய் 
மன நிகழ்வு இன்றி மாண்பு அமை பொதுவாய் 
எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம் எனச் 
சொல்லுதல் மூலப் பகுதி சித்தத்து 
மான் என்று உரைத்த புத்தி வௌிப்பட்டு 
அதன்கண் ஆகாயம் வௌிப்பட்டு அதன்கண் 
வாயு வௌிப்பட்டு அதன்கண் அங்கி 
ஆனது வௌிப்பட்டு அதன்கண் அப்பின்

தன்மை வௌிப்பட்டு அதில் மண் வௌிப்பட்டு 
அவற்றின் கூட்டத்தில் மனம் வௌிப்பட்டு 
ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் 
ஆகாயத்தில் செவி ஒலி விகாரமும் 
வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும் 
அங்கியில் கண்ணும் ஒளியும் ஆம் விகாரமும் 
தங்கிய அப்பில் வாய் சுவை எனும் விகாரமும் 
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் 
சொலப்பட்ட இவற்றில் தொக்கு விகாரமாய் 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் என

ஆக்கிய இவை வௌிப்பட்டு இங்கு அறைந்த 
பூத விகாரத்தால் மலை மரம் முதல் 
ஓதிய வௌிப்பட்டு உலகாய் நிகழ்ந்து 
வந்த வழியே இவை சென்று அடங்கி 
அந்தம் இல் பிரளயம் ஆய் இறும் அளவும் 
ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியம் ஆம் 
அறிதற்கு எளிதாய் முக் குணம் அன்றி 
பொறி உணர்விக்கும் பொதுவும் அன்றி 
எப் பொருளும் தோன்றுதற்கு இடம் அன்றி 
அப் பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்

ஒன்றாய் எங்கும் பரந்து நித்தியமாய் 
நின்று உள உணர்வாய் நிகழ்தரும் புருடன் 
புலம் ஆர் பொருள்கள் இருபத்தைந்து உள 
நிலம் நீர் தீ வளி ஆகாயம்மே 
மெய் வாய் கண் மூக்கு செவி தாமே 
உறு சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்மே 
வாக்கு பாணி பாதம் பாயுரு உபத்தம் 
ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம் 
உயிர் எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்' எனச் 
செயிர் அறச் செப்பிய திறமும் கேட்டு

'வைசேடிக! நின் வழக்கு உரை' என்ன 
'பொய் தீர் பொருளும் குணமும் கருமமும் 
சாமானியமும் விசேடமும் கூட்டமும் 
ஆம் ஆறு கூறு ஆம் அதில் பொருள் என்பது 
குணமும் தொழிலும் உடைத்தாய் எத் தொகைப் 
பொருளுக்கும் ஏது ஆம் அப் பொருள் ஒன்பான் 
ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை 
காலம் ஆன்மா மனம் இவற்றுள் நிலம் 
ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் 
பயில் குணம் உடைத்து நின்ற நான்கும்

சுவை முதல் ஒரோ குணம் அவை குறைவு உடைய 
ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை 
மாசு இல் பெருமை சிறுமை வன்மை 
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 
என்னும் நீர்மை பக்கம் முதல் அனேகம் 
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும் 
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு 
உரிய உண்மை தரும் முதல் பொதுத்தான் 
போதலும் நிற்றலும் பொதுக் குணம் ஆதலின் 
சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை

ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று 
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 
'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு 
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு 
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் 
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் 
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் 
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் 
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும்

அவ் அப் பூத வழி அவை பிறக்கும் 
மெய் வகை இதுவே வேறு உரை விகற்பமும் 
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே 
கண்கூடு அல்லது கருத்து அளவு அழியும் 
இம்மையும் இம்மைப் பயனும் இப் பிறப்பே 
பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்' 
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு 
'நன்று அல ஆயினும் நான் மாறு உரைக்கிலேன் 
பிறந்த முன் பிறப்பை எய்தப் பெறுதலின் 
அறிந்தோர் உண்டோ?' என்று நக்கிடுதலும்

'தெய்வ மயக்கினும் கனா உறு திறத்தினும் 
மையல் உறுவார் மனம் வேறு ஆம் வகை 
ஐயம் அன்றி இல்லை' என்றலும் 'நின் 
தந்தை தாயரை அனுமானத்தால் அலது 
இந்த ஞாலத்து எவ் வகை அறிவாய்? 
மெய்யுணர்வு இன்றி மெய்ப் பொருள் உணர்வு அரிய 
ஐயம் அல்லது இது சொல்லப் பெறாய்' என 
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள் உரைத்து 
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்கு என்